பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யவில்லை. முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.

கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்.

கடந்த ஏப்ரல் 11 திங்கட்கிழமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினால் பிரான்ஸில் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

பெரும்பாலான முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு தடை செய்த ஆடை எது அவா்கள் தடை செய்யது மார்க்க அடிப்படையில் நியாமானதா? இல்லையா என்பதை சரியாக அறியாமல் இருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ பெண்கள் அணியும் ஹிஜாபையே பிரான்ஸ் தடை செய்துவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலாவதாக பிரான்ஸ் அரசு எந்த வகையிலான ஆடைகளை பெண்களுக்கு தடை செய்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் மார்க்கத்தின் தெளிவை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.


பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா?

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் அணியும் முகத்திரை பற்றி மாத்திரம் தான் தடை உத்தரவைப் பிரப்பித்துள்ளது. அது தவிர பெண்களின் ஹிஜாபுக்கு முழு உடலையும் மறைப்பதற்கு பிரான்ஸ் தடை விதிக்கவே இல்லை. தடை விதிக்கவும் முடியாது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு செல்வதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது. பெண்கள் உடலை மறைப்பதை பிரான்ஸ் தடை செய்யவில்லை.

ஹிஜாபின் வகையும், பிரான்ஸின் தடையும்.

பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்.

பிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதன ை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் பிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார்கள்.

தடை செய்யப்பட்ட முகத்திரை வடிவங்கள்.

பெண்கள் அணியும் ஹிஜாபில் நான்கு வகையான முறைகள் உலகலவில் பின்பற்றப்படுகின்றன அவை ஹிஜாப், நிகாப், சடோர், புர்கா என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காது, தலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.

நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.

சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள்.

புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது

.மேற்கண்ட முறைகளில் நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகை முகத்திரைக்கு பிரான்ஸ் அரசு தடைவிதித்துள்ளது.


தங்கள் முகம் மற்றவர்களுக்கு தெரியாத விதத்தில் முகத்தில் திரையிட்டு மறைப்பதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதே தவிர முழுமையாக ஹிஜாப் அணிவதையே தடை செய்யவில்லை.

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயக் கடமையா?

சில முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு பெண்கள் முகத்திரையை போட்டுக்கொள்வதைத் தடை செய்துள்ளதினால் பிரான்சுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதுடன், பிரான்ஸ் அரசு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் இஸ்லாம் பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்றுதான் கட்டளையிடுகிறதே தவிர எந்த இடத்திலும் பெண்கள் முகத்திரை அணிந்து முகத்தை மறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

எந்தப் பெண்ணாவது தனது சுயவிருப்பத்தின் பேரில் முகத்திரை அணிந்தால் அதை இஸ்லாம் தடுக்கவும் இல்லை. ஆனால் முகத்திரையை பெண்கள் அணிவது கட்டாயக் கடமை என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது.

இஸ்லாம் கட்டாயப்படுத்தாத ஒரு ஆடை முறையைத்தான் பிரான்ஸ் அரசும் தடை செய்துள்ளது. தனது தடைக்கான காரணமாக பாதுகாப்புப் பிரச்சினையைத்தான் பிரான்ஸ் முன்வைக்கிறது. முகத்தை மறைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபர் பெண்ணா அல்லது ஆணா என்று சரியாக அடையாளம் காண முடியாமல் இருப்பதினாலேயே இந்தச் சட்டத்தை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ற பல நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைப்பதை சாட்டாக வைத்துக் கொண்டு பலரும் பல தவறான காரியங்களுக்கும் இந்த முகத்திரையைப் பயண்படுத்துகிறார்கள்.

இஸ்லாம் கட்டாயப்படுத்தாத மக்ககளாக கட்டாயமாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

இந்திய அளவில் சென்னை, மும்மை, கல்கத்தா போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகளில் பலர் முகத்தை மறைத்துக் கொண்டு செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். சென்னை கிழக்குக் கடற்கரை போன்ற இடங்களைப் போய் பாத்தால் இப்படி சுற்றும் பலரைக் காணலாம் ஆனால் இப்படி அலையும் இளவட்டங்களில் சரிபாதிப் பேருக்கும் மேல் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

பல சந்தர்பங்களில் விபச்சாரக் குற்றச் சாட்டுக்களில் சிக்கிய சினிமா நடிகைகள் கூட முகத்திரை அணிந்து கொண்டு நீதி மன்றங்களுக்கு வந்த வரலாறுகள் அதிகம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

பிரான்ஸில் வாழும் அணைத்து முஸ்லீம்களும் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்களா?

பெண்கள் முகத்தை மறைக்கும் நிகாப் மற்றும் புர்கா வகை ஆடைக்கு எதிராக பிரான்ஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை பிரான்ஸில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் எதிர்க்கவில்லை.

முகத்தை பெண்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் மாத்திரம் தான் இதனை எதிர்க்கிறார்கள் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக நாம் தெரிய வேண்டியது.

பெண்கள் முகத்தை மறைப்பதென்பது அவர்களுடைய சுயவிருப்பதில் உள்ளதுதானே ஒழிய மார்க்கம் பெண்கள் முகத்தை மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று எங்கும் கட்டளை பிறப்பிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தைத் திறந்து கொள்வதற்கு மிகத் தெளிவான அனுமதியை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்பதற்காக பெண்கள் முகத்திரை அணிவதை ஒரு நாடு தடை செய்தால் அதை எதிர்ப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட சட்டம் இஸ்லாத்தையே கொச்சைப்படுத்துகிறது என்று சொல்வதற்கே எந்த முகாந்திரமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.