நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 6 (மூடநம்பிக்கைகள்)

அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர். அந்த அம்புகள் மூன்றுவகையாக இருக்கும்.
முதல் வகை: இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ஆம்! எனவும் மற்றொன்றில் வேண்டாம் எனவும் எழுதப்பட்டு, மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள். அவற்றில் ஆம்! என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள். வேண்டாம் என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள். எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று வரும்வரை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
இரண்டாவது வகை: இந்த அம்புகளில் குற்றப் பரிகாரம் நஷ்டஈடு போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
மூன்றாவது வகை: இந்த அம்புகளில் மின்கும் (உங்களில் உள்ளவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் மின்கைகும் (உங்களில் உள்ளவர் அல்லர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும்,முல்ஸக் (இணைக்கப்பட்டவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் என மூன்று அம்புகள் இருக்கும். அவர்களில் எவருக்கேனும் ஒருவரது வமிசம் பற்றி சந்தேகம் எழுந்தால் அவரை 100 திர்ஹம் 100 ஒட்டகைகளுடன் ஹுபுல் என்ற சிலையிடம் அழைத்து வருவார்கள். தாங்கள் கொண்டு வந்த நாணயங்களையும் ஒட்டகங்களையும் அம்புகளுக்குப் பொறுப்பான பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள். பூசாரி அம்பை எடுப்பார். அப்போது மின்கும் என எழுதப்பட்ட அம்பு வந்தால், அவரைத் தங்களது இனத்தைச் சேர்ந்தவராக ஒப்புக் கொள்வார்கள். மின் ஙைகும் என்ற அம்பு வந்தால் அவரைத் தங்களுடன் நட்புகொண்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராகக் கருதுவார்கள். முல்ஸக் என எழுதப்பட்ட அம்பு வந்தால் அவர் அதே நிலையில் நீடிப்பார். அதாவது அவருக்கு எந்த வமிசப் பரம்பரையும் கிடையாது. எந்த நட்பு கோத்திரத்தை சேர்ந்தவராகவும் அவரைக் கருத மாட்டார்கள். (இப்னு ஹிஷாம்)

இதுபோன்றே அம்புகள் மூலம் சூதாடும் ஒரு பழக்கமும் அவர்களது வழக்கத்தில் இருந்தது.அதாவது, அவர்கள் ஓர் ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள். பிறகு அதை அறுத்து 28 அல்லது 10 பங்குகளாகப் பிரிப்பார்கள். அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும்.ஒன்றில் ராபிஹ் என்றும் இரண்டாவதில் குஃப்ல் என்றும் அரபியில் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொருவரின் பெயரையும் கூறி அம்புகளை உருவும்போது ராபிஹ் என்ற அம்பு வந்தால் அவர் பணம் கொடுக்காமல் இறைச்சியில் அவருக்குரிய பங்கை மட்டும் எடுத்துக் கொள்வார். குஃப்ல் என்ற அம்பு வந்தால் அவர் தோல்வியடைந்தவர் ஆவார். அவருக்கு இறைச்சியில் பங்கு எதுவும் கிடைக்காது. ஆனால், அந்த முழு ஒட்டகைக்கான விலையையும் அவரே கொடுக்க வேண்டும்.
மேலும் சோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுகளிலும் ஆருடங்களிலும் அம்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கான்: உலகில் நடக்க இருக்கும் செய்திகள் மற்றும் இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று வாதிடுபவன். அவர்களில் தங்களுக்கு ஜின் செய்தி கொண்டு வருகிறது என்று கூறுபவரும் தனது அறிவாற்றலின் மூலம் மறைவானவற்றை அறிவோம் என்று கூறுபவரும் உள்ளனர்.
அர்ராஃப்: தன்னிடம் வருபவர்களின் சொல், செயல் நிலைகளை ஆராய்ந்து செய்திகளைக் கூறுபவன். எடுத்துக்காட்டாக திருடுபோன பொருள்கள் எங்கிருக்கிறது? திருடியவன் யார்? காணாமல் போன பொருள் எங்கிருக்கிறது? போன்ற விபரங்கள் அனைத்தையும் தன்னால் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுபவனைப் போல!
முநஜ்ஜிம்: நட்சத்திரம் மற்றும் கோள்களின் சுழற்சியைக் கவனித்து உலகின் நிலைமைகளையும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் தன்னால் அறியமுடியும் எனக் கூறுபவன்.
இந்த முநஜ்ஜிம்களின் கூற்றை அவர்கள் நம்புவது உண்மையில் நட்சத்திரத்தை நம்புவதாகும். அவர்கள் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததின் காரணமாக,மழை பொழிந்தால் அம்மழை பருவ நட்சத்திரத்தின் காரணமாகவே பொழிந்தது என்று கூறுபவர்களாக இருந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அவர்களிடையே துற்குறி மற்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்களுடைய வழக்கத்தில் ஒன்று, ஏதாவதொரு காரியத்தை செய்ய நினைத்தால் ஒரு பறவையை அல்லது மானை விரட்டுவார்கள். அது வலப்புறமாகச் சென்றால் அதை நற்சகுனமாகக் கருதி தான் விரும்பியிருந்த காரியத்தை செயல்படுத்துவார்கள். இடப்புறமாகச் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள். இவ்வாறே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் பிராணிகளோ, பறவைகளோ குறுக்கிட்டால் அதிலும் சகுனம் பார்ப்பார்கள்.
அவ்வாறே அவர்கள் முயலின் கெண்டைக்கால் பகுதியை தங்களது இல்லங்களில் தொங்க விடுவார்கள். (நம் நாட்டில் நரிப்பல், புலிப்பல் மயில் இறகு போன்றவற்றை பயன்படுத்துவதுபோல) சில நாள்கள், மாதங்கள், பிராணிகள், வீடுகள், பெண்கள் ஆகியவற்றிலும் அபசகுனம் பார்த்தனர். மேலும், தொற்று நோய் இருப்பதாகவும் நம்பினர்.மேலும் ஹாம்மா என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதாவது, ‘ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலையாளியிடம் பழி தீர்க்கப்படாதவரை அவனது ஆன்மா சாந்தியடையாமல் வீடுகளின் மேல் ஆந்தை உருவில் பறந்துகொண்டு தாகம்! தாகம்! என் தாகத்தைத் தணியுங்கள்! என் தாகத்தைத் தணியுங்கள்” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். கொலையாளியை பழிவாங்கினால் மட்டுமே ஆன்மா சாந்தியடையும்” எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். (ஸஹீஹுல் புகாரி)
அறியாமைக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூட நம்பிக்கைகள் நிறைந்திருந்தபோதிலும் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருந்தன. அந்த மார்க்கத்தை அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடவில்லை.எடுத்துக்காட்டாக, இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருவது, ஹஜ், உம்ரா செய்வது, அரஃபா முஜ்தலிஃபாவில் தங்குவது, அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன. எனினும், அந்த நற்செயல்களில் பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.
அந்த மூடநம்பிக்கைகளில் சில,
1) குறைஷிகள் இவ்வாறு கூறி வந்தனர்: நாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததிகள்; புனித மக்காவின் பூர்வகுடிகள்; சங்கைமிகு கஅபாவின் நிர்வாகிகள். ஆகவேஎங்களைப் போன்ற அந்தஸ்தோ உரிமைகளோ வேறு அரபியர் எவருக்கும் கிடையாது” என்றனர். அவர்கள் தங்களுக்கு ஹும்ஸ் எனப் பெயரிட்டுக் கொண்டனர். ஹஜ் காலங்களில் நாங்கள் ஹரமின் எல்லையை விட்டு வெளியேறி ஹில் (ஹரம் அல்லாத)
பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று கூறி அவர்கள் ஹஜ் காலத்தில் அரஃபாவில் தங்க மாட்டார்கள். முஜ்தலிஃபாவில் இருந்தே திரும்பி விடுவார்கள். இதனைத் தடை செய்து அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறக்கினான், பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற இடத்திலிருந்தே நீங்களும் திரும்பிவிடுங்கள். (அல்குர்ஆன் 2 : 199) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
2) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ் ஆகிய எங்களுக்குப் பாலாடைக் கட்டி செய்வதும் நெய் உருக்குவதும் இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்டது. மேலும், இஹ்ராமில் இருக்கும் போது கம்பளிக் கூடாரங்களில் நுழைய மாட்டோம். தோலினால் ஆன கூடாரங்களைத் தவிர மற்ற கூடாரங்களில் நிழலுக்காக ஒதுங்கமாட்டோம். (இப்னு ஹிஷாம்)
3) ஹரமுக்கு வெளியிலிருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வருபவர்கள் தங்களது பகுதியிலிருந்து கொண்டு வந்த உணவு மற்றும் பானங்களை ஹரமுக்குள் உண்ணவோ பருகவோ கூடாது. ஹரமின் பகுதியில் கிடைப்பதையே உண்ண வேண்டும். (இப்னு ஹிஷாம்)
4) ஹரமின் வெளிப் பகுதியிலிருந்து வருபவர்கள் கஅபாவை வலம் வரும்போது ஹும்ஸ்கள் கொடுக்கும் ஆடைகளை அணிந்தே வலம் வருவதை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக வெளியிலிருந்து வரும் ஆண்களுக்கு குறைஷி ஆண்களும், அதே போன்று பெண்களுக்குக் குறைஷிப் பெண்களும் ஆடைகளை நன்மையைக் கருதி இலவசமாகக் கொடுத்து வந்தனர். ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் ஆண்கள் நிர்வாணமாக வலம் வருவார்கள். பெண்கள் தங்களது அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு முன்பகுதி திறந்துள்ள ஒரு மேல் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு வலம் வருவார்கள். அப்போது அப்பெண்கள் இக்கவிதையைக் கூறுவார்கள். 
இன்று (உடலின்) சில பகுதிகளோ அல்லது முழுப் பகுதியோ வெளிப்படுகிறது. அவற்றில் எது வெளிப்படுகிறதோ அதைக் காண்பது எவருக்கும் முறையற்றது.”
இச்செயலைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்:
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7 : 31)
அதேநேரத்தில் யாரேனும் ஓர்ஆண் அல்லது பெண் தங்களை மேன்மையானவர்களாக கருதி இரவல் ஆடை வாங்காமல் தாங்கள் கொண்டு வந்த ஆடையிலேயே வலம் வந்துவிட்டால் அது முடிந்தவுடன் அந்த ஆடையை எறிந்து விடுவார்கள். வேறு யாரும் அதனைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
5) அவர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டு தலைவாசல் வழியாக நுழையாமல் பின்பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியாகவே போவார்கள், வருவார்கள். இந்த மூடத்தனமான செயலை மிகவும் உயர்ந்த நற்செயல் என அவர்கள் கருதினார்கள். இதை கண்டித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:
(நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
(அல்குர்ஆன் 2 : 189) (ஸஹீஹுல் புகாரி)
இணைவைத்தல், சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவையே அரபிய தீபகற்பத்தில் பரவி இருந்தன. இது தவிர யூத, கிருஸ்துவ, மஜூஸி, ஸாபி போன்ற மதங்கள் அரபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்டன.
இரண்டு கட்டங்களில் யூதர்கள் அரபிய தீபகற்பத்தில் ஊடுருவினர்.
1) ஃபலஸ்தீனத்தை புக்து நஸ்ரு என்ற மன்னன் கி.மு. 587 ஆம் ஆண்டு கைப்பற்றிmஅங்கு வாழ்ந்த யூதர்களை நெருக்கடிக்குள்ளாக்கினான். யூதர்களின் நகரங்களை அழித்து அவர்களது வசிப்பிடங்களை நாசமாக்கினான். மேலும், அவர்களில் அதிகமானோரை பாபில் நகருக்கு கைதிகளாக்கிக் கொண்டு சென்றான். இதனால் அவர்களில் ஒரு பிரிவினர்
ஃபலஸ்தீனத்தை துறந்து ஹிஜாஸின் வட பகுதிகளில் குடியேறினர்.
2) கி.பி. 70 ஆம் ஆண்டில் டைடஸ் என்ற ரோமானிய மன்னன் ஃபலஸ்தீனை கைப்பற்றினான். அவன் யூதர்களையும் அவர்களது வசிப்பிடங்களையும் அழித்தொழித்தான்.அதன் விளைவாக ஏராளமான யூதர்கள் ஹி ஜாஸ் பகுதியிலுள்ள மதீனா, கைபர், தீமா ஆகிய நகரங்களில் குடியேறினர். அங்கு தங்களுக்கென சிறந்த வசிப்பிடங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த யூதர்களால் அரபியர்களிடையே யூத மதம் பரவ ஆரம்பித்தது. இஸ்லாமின் வருகைக்கு முன்பும் இஸ்லாமுடைய வருகையின் ஆரம்ப காலக்கட்டத்திலும் நடந்த அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் யூத மதத்திற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் இருந்தது. இஸ்லாம் தோன்றியபோது இருபதுக்கும் மேற்பட்ட யூத கோத்திரங்கள் அரபிய தீபகற்பத்தில் இருந்தன. அவற்றில் பிரபலமானவை கைபர், நழீர், முஸ்தலக், குரைளா, கைனுகாஃ ஆகிய கோத்திரங்களாகும். (ஸஹீஹுல் புகாரி, வஃபாவுல் வஃபா) 
துப்பான் அஸ்அத் அபூ கரப் என்பவனால் யூதமதம் யமன் நாட்டிலும் நுழைந்தது. இவன் மதீனாவின் மீது போர் தொடுத்தான். பிறகு அங்கே, யூதர்கள் மூலம் யூத மதத்தைத் தழுவினான். குரைளா குடும்பத்தைச் சார்ந்த இரு யூத அறிஞர்களை அவன் தன்னுடன் யமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து யமனில் யூதமதம் பரவியது. அபூகரபுக்குப் பிறகு அவனது மகன் யூஸ{ப் தூ நுவாஸ் யமனின் அரசனானான். அவன் நஜ்ரான் பகுதியிலிருந்த கிறிஸ்துவர்கள் மீது படையெடுத்து அவர்களை யூத மதத்திற்கு மாறும்படி நிர்ப்பந்தித்தான். அவர்கள் மறுத்துவிடவே பெரும் அகழிகளைத் தோண்டி அதை நெருப்புக் குண்டமாக ஆக்கி அதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் தூ நவாஸ் வீசி எறிந்தான். அதில் ஏறத்தாழ இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் கிறிஸ்துவர்கள் வரை கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி கி.பி. 523ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. (இப்னு ஹிஷாம்) 
இதைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்: 
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (அல்குர்ஆன் 85 : 4 – 7)
கிறிஸ்துவ மதம்: ஹபஷியர் மற்றும் சில ரோமானிய குழுக்களின் ஆக்கிரமிப்புகளால் அரபிய நாடுகளுக்குள் இம்மதம் புகுந்தது. ஹபஷிகள் யமன் நாட்டை முதன்முறையாக கி.பி. 340 ஆம் ஆண்டில் கைப்பற்றினர். அவர்களது ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நிலைத் திருக்கவில்லை. கி.பி. 370லிருந்து 378 வரையுள்ள காலத்தில் அவர்கள் யமனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். எனினும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்கள் வெறிகொண்டு அலைந்தனர். ஹபஷியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஃபீம்யூன் எனும் ஓர் இறைநேசர் நஜ்ரான் வந்தடைந்தார். அங்கு வசிப்பவர்களை கிறிஸ்துவத்தைத் தழுவ அழைத்தார். அவன் வாய்மையையும் அவரது நேரிய மார்க்கத்தையும் கண்ட அம்மக்கள் ஆர்வத்துடன் கிறிஸ்துவத்தில் இணைந்தனர். (இப்னு ஹிஷாம்)
நஜ்ரானில் வசித்த கிறிஸ்துவர்களை மன்னன் தூ நுவாஸ் நெருப்பு அகழியில் எரித்துக் கொன்றானல்லவா! அதற்குப் பழிவாங்கும் முகமாக ஹபஷியர்கள் இரண்டாவது முறையாக கி.பி 525ஆம் ஆண்டில் யமனைக் கைப்பற்றினர். அப்போது அப்ரஹா அல் அஷ்ரம் என்பவன் யமனை ஆட்சி செய்தான். அவன் கிறிஸ்துவத்தை தீவிரமாக பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினான். அவன் யமனில் ஒரு கிறிஸ்துவ கோயிலைக் கட்டினான். கஅபாவை ஹஜ்ஜு செய்யச்செல்லும் அரபியர்கள் ஹஜ்ஜுக்காக கஅபா செல்வதைத் தடுத்து, தான் கட்டிய கோயிலைத் தரிசிக்க வரவேண்டும்; கஅபாவை இடித்துத் தகர்த்திட வேண்டுமென விரும்பினான். ஆனால் கடுந்தண்டனையால் அல்லாஹ் அவனை அழித்துவிட்டான்.
மற்றொரு புறம், ரோம் பகுதிகளை ஒட்டியிருந்த காரணத்தால் கஸ்ஸானிய அரபியர்கள்,தங்லிப், தய்ம் வமிசத்தைச் சேர்ந்த அரபியர்களும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.இதைத்தவிர ஹீராவின் சில அரசர்களும் கிறிஸ்துவத்தைத் தழுவினர்.
மஜூஸிய்யா: (நெருப்பை வணங்கும் மதம்) இது பெரும்பாலும் பாரசீகத்தை ஒட்டியிருந்த அரபியர்களிடம் காணப்பட்டது. இராக், பஹ்ரைன், அல் அஹ்ஸா, ஹஜர் மற்றும் அரபிய வளைகுடா பகுதிகளில் வசித்து வந்த அரபியர்களும் இதைப் பின்பற்றினர். இது மட்டுமின்றி யமன் நாட்டை பாரசீகர்கள் கைப்பற்றியிருந்த காலத்தில் யமனியர் பலர் மஜூஸி மதத்தில் இணைந்தனர்.
ஸாபியிய்யா: இது நட்சத்திரங்களை வணங்கும் மதம். அதாவது, கோள்களும் நட்சத்திரங்களும் தான் இவ்வுலகை இயக்கி வருகின்றன என்று நம்பிக்கை கொள்ளும் மதமாகும். இராக் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும்,தொல்பொருள் ஆராய்ச்சியும் இது இப்றாஹீம் (அலை) அவர்களின் கல்தானி இனத்தவர் மதமாக இருந்தது என தெவிக்கின்றன. முற்காலத்தில் ஷாம் மற்றும் யமன் நாடுகளில் அதிகமானவர்கள் இம்மதத்தையே பின்பற்றினர். எனினும், யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் தோன்றி வலிமை பெற்றபோது ஸாபியிய்யா மதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்து, அதன் வளர்ச்சி பெரிதும் குன்றியது. எஞ்சியிருந்த இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் மஜூஸிகளுடன் கலந்து வாழ்ந்தனர். அல்லது அரபிய வளைகுடா பகுதிகளிலும் இராக்கிலும் வாழ்ந்து வந்தனர். யமன் நாட்டிலுள்ள ஹீரா பகுதியின் வழியாக இம்மதத்தை பின்பற்றியவர்களின் கலாச்சாரம் அரபியர்களிடமும் பரவியது. அவ்வாறே பாரசீகர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் மதக் கலாச்சாரம் குறைஷியர்களில் சிலரிடமும் காணப்பட்டது. 
சமயங்களின் நிலைமைகள் 
இஸ்லாமியப் பேரொளி பிரகாசிக்கத் தொடங்கியபோது இம்மதங்களையே அரபியர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இம்மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. நாங்களே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் நிலைத்திருக்கிறோம் என வாய்ப்பந்தல் கட்டியிருந்த முஷ்ரிக்குகள் உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கச் சட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தனர். அவர்கள் கற்றுத் தந்த நற்பண்புகளை முழுதும் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களிடையே குற்றங்கள் மலிந்து, சிலை வணங்கிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளும் வழிகேடுகளும் கால ஓட்டத்தில் அவர்களின் மதச் சடங்குகளாக மாறின. இச்சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களது
சமய, சமூக, அரசியல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.
யூத மதம் முற்றிலும் முகஸ்துதியாகவும், சர்வாதிகாரமாகவும் மாறியிருந்தது. அம்மதத் துறவிகளும் அதன் தலைவர்களும் கடவுளர்களாக விளங்கினர். மார்க்க சட்டங்கள் என்ற பெயரால் வாழ்க்கையை நெருக்கடியாக்கி தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களைக் கசக்கிப் பிழிந்தனர். மக்களிடையே இறை நிராகரிப்பும், சமூகச் சீர்கேடுகளும் பரவிக் கிடந்தாலும்,நேரிய மார்க்கம் சிதைக்கப்பட்டு சீர்கெட்டிருந்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் செல்வங்களை சேகரிப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள். எத்தகைய உயர் போதனைகளைக் கற்று அதனைப் பின்பற்றி வாழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டிருந்தானோ அவையனைத்திற்கும் சமாதி கட்டினர்.
கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது. அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது.அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை.அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.
அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன. அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.
நூல் : ரஹீக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.