சந்திக்கும் வேளையில்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு சொற்கள் மூலம் முகம கூறுகின்றனர். சந்திக்கப்படுபவர் முக்கியமான நபர் என்றால் அவரது காலில் விழுதும், கூனிக் குறுகுவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இஸ்லாம் கற்றுத் தரும் முகமன் மனிதனின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாதவகையிலும், சம நிலையில் அன்பு செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
· இஸ்லாத்தின் முகமன் ஸலாம்
· ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்
· பல வகைச் சொற்கள்
· ஸலாம்
· ஸலாமுன் அலை(க்)க
· அஸ்ஸலாமு அலை(க்)க
· ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை
· ஸலாமுக்குப் பதிலுரைத்தல்
· சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்
· ஸலாம் சொல்லி அனுப்புதல்
· ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?
· ஸலாமின் ஒழுங்குகள்
· மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது
· ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் முகமன் கூறுகின்றனர். நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.
அது போல் ஆங்கிலக் கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம் கூறும் வழக்கம் பரவிவிட்டது.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்றால் ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்‘ என்று பொருள். திருமண வீட்டுக்கும் சாந்தி தேவை. மரண வீட்டுக்கும் சாந்தி தேவை. இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. நட்டம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனித வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரிடமும் பயன்படுத்தத் தக்க ஒரே முகமன் ஸலாம் கூறுதல் மட்டுமே.
ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்
‘நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு ‘உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்‘ என்றனர்.
நூல் : முஸ்லிம் 81
‘இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது?’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்‘ என விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 12, 28, 6236
சுய நலம், கோபதாபம் போன்ற தீய குணங்களின் காரணமாக மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் நிகழ்வது சகஜம். இத்தகைய சண்டைகள் காலா காலத்துக்கும் நீடிக்கக் கூடாது. கோப உணர்வு அடங்கிய உடன் சமாதானமாகி விட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.
இதனால் தான் ‘எந்த முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகைமையாக இருக்கக் கூடாது‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டினார்கள். பகைமையாக இருக்கக் கூடாது என்றால் முன்பு போலவே இருவரும் உடனடியாக நட்புறவாக ஆக வேண்டும் என்பது இதன் பொருளல்ல. பெரும்பாலான உள்ளங்களுக்கு உடனடியாக இது சாத்தியப்படாது. பகைமையைப் படிப்படியாகத் தான் குறைக்க முடியும். அதற்கு முதல் படியாக அமைவது ஸலாம் தான்.
பகைமை கொண்டவராக இருந்தாலும் மூன்று நாட்கள் கடந்து விட்டால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகம் பார்த்து ஸலாம் கூறினால் சமாதானத்தின் முதல் படியில் நாம் ஏறி விடுகிறோம். இது தொடரும் போது நாளடைவில் முழுமையான நல்லிணக்கம் ஏற்பட்டு விடும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாகப் பின் வருமாறு கூறுகிறார்கள்.
‘ஒரு மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக் கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6077, 6237
பல வகைச் சொற்கள்
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன.அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸலாமுன் அலை(க்)கும்
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதற்கு பதிலாக ஸலாமுன் அலை(க்)கும் என்றும் முகமன் கூறலாம்.
(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்‘ எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:54
அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவர் மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ் வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்‘ என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே (இது வரை) நுழையாமல் உள்ளனர்.
திருக்குர்ஆன் 7:46
நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 13:24
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!‘ என்று கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 16:32
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்‘ எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55
தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!‘ என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 39:73
ஸலாம்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் என்று மட்டும் கூறினால் அதுவும் அங்கீகரிக்கப்பட்டது தான்.
‘அல்லாஹ்வே! நீ தூயவன்‘ என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ‘அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்‘ என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.
திருக்குர்ஆன் 10:10
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.
திருக்குர்ஆன் 11:69
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாக இருப்பார்கள். ஸலாம் என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.
திருக்குர்ஆன் 14:23
அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் ‘நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்‘ என்றார்.
திருக்குர்ஆன் 15:52
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன், 33:44
அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
திருக்குர்ஆன், 43:89
அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்!
திருக்குர்ஆன், 51:25
ஸலாமுன் அலை(க்)க
திருக்குர்ஆன் 19:47
இப்றாஹீம் நபியவர்கள் தமது தந்தைக்கு ஸலாம் கூறிய போது ஸலாமுன் அலைக்க எனக் கூறியதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.
அஸ்ஸலாமு அலை(க்)க
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜஃபர் பின் அபீதாலிபின் மகனுக்கு ஸலாம் கூறும் போது இரண்டு சிறகுகள் உடையவரின் மகனே! அஸ்ஸலாமு அலைக்க என்று கூறுவார்கள்.
நூல் : புகாரி 3709, 4264
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் (ரலி) ஆகியோர் ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு அலை(க்)கி என்று இதனடிப்படையில் தான் கூறியுள்ளனர்.
பார்க்க : புகாரி 6075
ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை
அலை(க்)கும் (உங்கள் மீது) என்பது பன்மையாக இருந்தாலும் ஒருவருக்கு ஸலாம் கூறும் போது நாம் இதைப் பயன்படுத்தி வருகிறோம். இப்படிப் பயன்படுத்தாமல் ஒருமை, இருமை (அரபியில் இருமை என்று ஒரு வகை உண்டு) பன்மைக்கேற்றவாறு சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.
ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்த போது நீ சென்று அங்கே அமர்ந்துள்ள வானவர்களுக்கு ஸலாம் கூறு! அவர்கள் என்ன மறுமொழி கூறுகிறார்கள் என்பதைச் செவிமடு. ஏனெனில் அது உமக்கும் உமது வழித் தோன்றலுக்கும் உரிய முகமன் ஆகும் என்று அல்லாஹ் கூறினான். ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களுக்கு) அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று (பன்மையாக) கூறினார். வானவர்கள் பதிலளிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி என்று கூறினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6227, 3326
ஸலாமுக்குப் பதிலுரைத்தல்
ஒருவர் ஸலாம் கூறினால் அதற்கு மற்றவர் மறுமொழி கூறுவது கட்டாயக் கடமையாகும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து 1) ஸலாமுக்குப் பதிலுரைத்தல் 2) நோயாளியை நலம் விசாரித்தல் 3) ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) பின் தொடர்ந்து செல்லுதல் 4) விருந்தை ஏற்றுக் கொள்ளுதல் 5) தும்மல் போட்டவருக்காகப் பிரார்த்தனை செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1240
சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்
முகமன் கூறுபவர் பயன்படுத்தும் சொற்களை விடச் சிறந்த முறையில் அல்லது அதற்குச் சமமான முறையில் மறுமொழி கூற வேண்டும்.
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:86
ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுக்கு ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று மட்டும் கூறினார்கள். வானவர்கள் மறுமொழி கூறிய போது வரஹ்மதுல்லாஹி என்று மேலதிகமாகக் கூறினார்கள் என்று முன்னரே நாம் குறிப்பிட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.
இப்றாஹீம் நபியவர்களுக்கு வானவர்கள் ஸலாம் கூறிய போது இப்றாஹீம் நபியும் ஸலாம் என்று மறுமொழி கூறியதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் இதற்கான ஆழ்ரமாகும்.
ஸலாம் சொல்லி அனுப்புதல்
ஒருவரை நேரடியாக நாம் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது போல் நம் முன்னே இல்லாதவருக்காக இன்னொருவரிடம் ஸலாம் கூறி அனுப்பலாம். யாரிடம் ஸலாம் சொல்லி அனுப்பப்படுகிறதோ அவர் சம்பந்தப்பட்டவருக்கு இதைத் தெரிவிக்க வேண்டும். யாருக்கு ஸலாம் கூறி அனுப்பபட்டதோ அவரும் மறுமொழி கூற வேண்டும். அதற்காக ஆதாரங்கள் வருமாறு.
என் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் உடனே வரவும் என்ற செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார். மேலும் ஸலாமும் சொல்லி அனுப்பினார்.
நூல் : புகாரி 1284, 5655, 6655
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களின் குடும்பத்தினர் அஞ்சிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிழலில் பகல் தூக்கம் தூங்கியதைக் கண்ட அபூகதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஸலாமையும் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் (அருளையும்) சொல்லி அனுப்பியுள்ளனர் எனக் கூறினார் (ஹதீஸ் சுருக்கம்)
நூல் : புகாரி 1821, 1822
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனைவியை மணமுடித்து வீட்டுக்குள் சென்றனர். எனது தயார் உம்மு சுலைம் இனிப்பான உணவைத் தயார் செய்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். என் தாயார் உங்களுக்கு ஸலாம் கூறினார் என்று தெரிவித்தேன்………. என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
நூல் : நஸயீ 2572
‘ஆயிஷாவே இதோ ஜிப்ரீல் உனக்கு ஸலாம் கூறுகிறார்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹ என்று மறுமொழி கூறினார்கள். (வஅலைஹி என்றால் அவர் மீது என்று பொருள்) நூல் : புகாரி 3217, 3768, 6201, 6249, 6253
ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.
திருக்குர்ஆன் 60:4
‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்‘ என்று (இப்ராஹீம்) கூறினார்.
திருக்குர்ஆன் 19:47
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ‘ஸலாம்‘ எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 25:63
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்‘ எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55
‘என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்‘ என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
திருக்குர்ஆன் 43:88,89
வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258
யஹூதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927
யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.
ஸலாமின் ஒழுங்குகள்