தப்லீக் தாலீமை பின்பற்றலாமா?

கேள்வி : சுன்னத் ஜமாத்தினர் தஹ்லீம் என்ற ஒன்றை வாசிப்பார்கள் அதில் ஹதீஸ் இல் உள்ளதை தன solhirahal என்று ஒரு சஹோதரர் சொன்னார் அதை பற்றி விளக்கவும்.
பதில் : சுன்னத் ஜமாத்தினர் வாசிக்கும் தஃலீம் தொகுப்பிற்கு “தப்லீக் தஃலீம் தொகுப்பு” என்று சொல்லுவார்கள். ஜக்கரிய்யா சாஹிப் என்ற ஒருவரினால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் ஆரம்பமாக சில குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இடம் பெற்றிருப்பது உண்மை.

தொழுகையின் சிறப்பு,ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இந்த நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன. ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை சொறுக ஆரம்பித்து விடுவார்.

ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் தஃலீம் தொகுப்பு மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து புத்தக ஆசிரியர் ஜக்கரிய்யா சாகிப் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை.

தஃலீம் தொகுப்பில் மார்க்கத்திற்கு முரனான பல நச்சுக் கருத்துக்கள் அடங்கியிருப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டோம் அதனடிப்படையில் அதில் உள்ள மார்க்கத்திற்கு முரனான செய்திகளில் சிலதை மட்டும் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகின்றோம்.

பாவங்களைப் பார்க்காத பெரியார்

கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்லோர்களைப் பற்றி பொய்களையும் மிகையான புகழுரைகளையும் தப்லீகின் தஃலீம் தொகுப்பில் ஏராளமாக நாம்காண முடிகிறது. இந்த வகையிலமைந்த பொய் ஒன்றைக் காண்போம்.

உளூ செய்பவர் கழுவப்பட வேண்டிய உறுப்புக்களை கழுவும் போது அவ்வுறுப்புகளால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதால் உண்மை முஸ்லிம்களுக்கு இதில் எந்த சந்தேகமும் ஏற்படப் போவதில்லை. இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை விளக்கவுரை ஏதுமின்றி மொழிமாற்றம் செய்தாலே உளூவின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஸகரிய்யா சாஹிப் இது பற்றி வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயரில் கதையளந்திருக்கிறார்.

 “கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும். உளூச் செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.”

(பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் 27)

 உளூவின் சிறப்பு பற்றி விளக்குவதற்கு இந்த இடத்தில் இந்தக்கதை அவசியமில்லாமலிருந்தும் வலுக்கட்டாயமாக இந்த இடத்தில் நுழைக்கப்படுகிறது. இதை நாம் பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க வேண்டியது அவசியம்.

ஸகரிய்யா சாஹிப் கூறுவது போல் கஷ்பு எனும் அகப்பார்வை என்று ஒன்று உண்டா: திருக்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழி கேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.

மற்றவர்களுக்கு இருப்பதைவிட கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் மிரளச் செய்தார்கள். இந்தப் போலி ஞானத்தையே ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இங்கே இஸ்லாத்தின் பெயரால் அறிமுகம் செய்கிறார்.

இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்கு கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.

கஷ்பு எனும் அகப்பார்வை இருப்பது உண்மையானால் அந்த அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கு அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காணமுடியவில்லை. நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியமில்லை.

நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உளூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. ஸகரிய்யா சாஹிப் நபித்தோழர்களை விடவும் நபி (ஸல்) அவர்களை விடவும் உயர்வானவர்களாக, தான் பின்பற்றும் இமாமைக் கருதுகிறார். இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பொய்யான புகழுரைகள் தான் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கின்றன.

மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது எனபதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. கஷ்பு என்னும் ஞானம (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம். இவர்கள் மதிக்கும் பெரியார்களுக்கு இறைத்தன்மையில் பங்கு போட்டுக் கொடுக்கும் இந்தக் கதையை எப்படி நம்ப முடியும்?

மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் உளூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது. அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.

அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களா? நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.

அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் – அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் – ஸகரிய்யா சாஹிபுக்கு எப்படித் தெரிந்தது? அபூஹனீபா (ரஹ்)  அவர்களின் காலத்திற்குச் சுமார் 1200 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த ஒருவர் இதை எப்படி அறிய முடியும்? இந்த தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப்புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?

இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப்பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.

ஸஹாரன்பூர் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் ஹதீஸ் வகுப்பு நடத்தி, தனக்குத் தானே ஷைகுல் ஹதீஸ் (ஹதீஸ் கலை மேதை) என்று பட்டம் சூட்டிக் கொண்ட ஸகரிய்யா சாஹிப் ஒரு ஆதாரமும் இல்லாமல் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சம்பவம் பிரபலமானதாகும் என்று மொட்டையான முத்திரையுடன் இதைப் பதிவு செய்தது எப்படி என்பது தான் விந்தையாக உள்ளது.

அமல்களின் – வணக்க வழிபாடுகளின் சிறப்புகளைக் கூறுவது போன்ற பாணியில் பெரியார்களுக்கு தெய்வீக அம்சம் வழங்கி தங்களுக்கும் அதில் ஒரு பாதியை பங்கு போட்டுக்கொள்வதே இவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பணக்காரராகும் வழி என்ன?

அல்லாஹ்வுடைய தனித்தன்மையைப் பெரியார்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தில் மற்றவர்களையும் பங்காளிகளாக்கும் விதமாகவும் பலவேறு கப்ஸாக்களை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் நாம் காணமுடிகின்றது. இந்த வகையில் அமைந்த கப்ஸா ஒன்றைக் காணுங்கள்!

ஹஜ்ரத் ஷகீக் பல்கீ (ரஹ்) என்பவர்கள் பிரபலமான சூபியும் பெரியாருமாவார்கள். அவர்கள் கூறியதாவது; நாம் ஐந்து விஷயங்களைத் தேடினோம். அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டோம்.

1.      இரணத்தில் பரக்கத்து, லுஹாத் தொழுகையில் கிடைத்தது.

2.      கப்ருக்கு ஒளி, தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது.

3.      முன்கர் நகீரின் கேள்விக்கு பதில், கிராஅத்தில் கிடைத்தது.

4. சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக்கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது.

5. அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழுகையின் சிறப்புகள் பகுதியில் பக்கம் 37 ல் இந்தத் தத்துவம் (?) இடம் பெற்றுள்ளது. பயபக்தியுடன் இந்த கப்ஸாக்கள் பள்ளிவாசல்களில் வைத்துப் படிக்கப்பட்டு வருகின்றன். இதைப் பல கோணங்களில் நாம் அலசுவோம்.

ஐந்து விஷயங்களை பல இடங்களில் தேடியதாகவும் அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டதாகவும் ஷகீக் பல்கீ என்பவர் கூறியதாக ஸகரிய்யா சாஹிப் கூறுகிறார்.

இரணத்தில் பரக்கத் லுஹாத் தொழுகையில் கிடைத்தது என்பது முதல் விஷயம். அவருக்கு இரணத்தில் பரக்கத் கிடைத்திருக்கலாம். அது லுஹாத் தொழுகையினால் தான் கிடைத்தது என்று அவருக்கு எப்படி தெரிந்தது? அவர் செய்த வேறு நல்ல அமல்களுக்காக அது கிடைத்திருக்க முடியாதா? அல்லது வேறு எந்த நல் அமலும் அவர் செய்ததேயில்லையா?

இந்த அமல் செய்தால் இது கிடைக்கும் என்று அறிவிப்பது அல்லாஹ்வின் முடிவில் உள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் வழியாக தவிர வேறு எவரும் அறிய முடியாது. லுஹாத் தொழுகையினால் இரணத்தில் பரக்கத் கிடைக்கும் என்று இவருக்கு வஹீ ஏதேனும் வந்ததா? ஸகரிய்யா சாஹிபுக்கே வெளிச்சம். இதையாவது அனுபவத்தின் வாயிலாக அறிந்ததாகக் கூறி சமாளிக்கலாம். ஏனைய நான்கு விஷயங்களை இவர் தெரிந்து கொண்டது தான் மிகப் பெரிய ஆச்சரியம்!

கப்ருக்கு ஒளி தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது என்கிறார் ஸகரிய்யா சாஹிப், கப்ரில் ஒளி கிடைக்கும் என்றுகூட இவர் சொல்லவில்லை. கிடைத்தது என்கிறார். கப்ரில் ஒளி கிடைத்தது என்று கூறுவதென்றால் இவர் செத்துப் பிழைத்து இதைக் கூறினாரா? கப்ரில் ஒளி கிடைத்ததை இவர் வேறு எந்த வழியில் அறிந்து கொண்டார்? தப்லீக் அறிஞர்கள் விளக்குவார்களா?

முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்தில் கிடைத்தது என்கிறார். அப்படியானால் முன்கர் நகீரின் கேள்விகளை இவர் சந்தித்த பிறகு இதை கூறினாரா? அதாவது இறந்த பிறகு உயிர்த்தெழுந்தாரா? அல்லது இறப்பதற்கு முன்பே முன்கர் நகீரைச் சந்தித்து விட்டாரா? இதையும் அவர்கள் விளக்கட்டும்!

சிராதுல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது என்று கூறுகிறார். சிராதுல் முஸ்தகீம் என்ற பெயரில் பாலம் எதுவும் உண்டா என்பது தனியாக இருக்கட்டும்! இவர் எப்போது அந்தப் பாலத்தைக் கடந்தார்? பாலத்தைக் கடந்து விட்டால் உடனே சுவர்க்கத்தில் நுழைந்திருப்பாரே! ஒருவேளை சுவர்க்கத்திலிருந்து கொண்டு தான் ஷகீக் பல்கீ இதைக் கூறினாரா?

ஏட்டில் எழுதப்பட்டு விட்டால் நம்பித் தொலைக்க வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் நிலவுவதால் இவ்வாறெல்லாம் மக்களில் பலர் சிந்திப்பதில்லை.

குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு கொசுபறக்கிறது என்று கூறினாலும் ஆமாம் என்று தலைளாட்டுபவர்களாக மக்கள் இருப்பதால் ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகளை மார்க்கம் என்ற பெயரால் வியாபாரம் செய்ய முடிகிறது.

லுஹா, தஹஜ்ஜுத், கிராஅத், நோன்பு, ஸதகா ஆகிய நல்லறங்களை வலியுறுத்தி எத்தனையோ ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இது போன்ற பொய்கள் மூலம் அதற்கு சிறப்பு சேர்க்க என்ன அவசியம்? என்பதை தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும். பெரியார்கள் என்பவர்கள் கப்ரில் நடப்பதை எல்லாம் அறியும் திறனுள்ளவர்கள் என்ற நம்பிக்கையை மக்கள் உள்ளங்களில் பதியச் செய்வதே இக்கதையின் நோக்கம் என்பதை இனியாவது உணர வேண்டும்.

மேற்கூறிய நான்கு விஷயங்களாவது செய்யத்தக்க நல்லறங்களாகவே உள்ளன. அவற்றின் பலன்கள் பற்றி மட்டுமே பொய் புனையப்பட்டுள்ளது. இவர் கடைசியாகக் குறிப்பிடும் விஷயம் மார்க்கத்துடன் எந்த விதத்திலும் சம்மந்தமில்லாததாகும். குர்ஆன், ஹதீஸ் போதனைகளுடன் நேரடியாக மோதக் கூடியதுமாகும்.

அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்கிறார். அர்ஷுடைய நிழலில் அமர்ந்து கொண்டு தான் இதைக் கூறினாரா? இதை எப்படி கண்டு பிடித்தார்? என்பது போன்ற கேள்விகளை விட்டு விடுவோம்.

தனிமையில் இருப்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அல்லது வரவேற்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட காரியமாக நிச்சயமாக இல்லை. இது இஸ்லாத்தில் முழுமையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று அடிக்கடி போதனை செய்யும் தப்லீக் ஜமாஅத்தினர் எப்படி இதை ஜீரணிக்கிறார்கள் என்பது தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்றால் சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.

தப்லீகின் ஸ்தாபகர் மரியாதைக்குரிய முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் தனிமையை நாடிச்சென்றிருந்தால் தப்லீக் இயக்கமே தோன்றியிருக்க முடியாது. தனிமையின் மூலம் அர்ஷுடைய நிழலை அடையமுடியும் என்பது உண்மையானால் தப்லீக் ஜமாஅத்தினர் ஏன் ஊர்ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து தொழுகைக்கு அழைக்க வேண்டும்? பல்வேறு பகுதிகளில் கல்விக்கூடங்களை ஏன் அவர்கள் துவக்க வேண்டும்? தப்லீக் ஜமாஅத்துடைய அடிப்படையையே தகர்க்கும் நோக்கில் தான் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இவ்வாறு கதைக்கட்டி விட்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்வத் என்று கூறப்படும் இந்தத் தனிமைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன என்பதைக் காணுவோம்.

நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், ஒருவொருக்கொருவர் உறுதுணையாக இருத்தல், முஸ்லிம்களின் தேவைகளில் உதவி செய்தல், அவர்களுக்கிடையே சமரசம் செய்தல், மனைவி, மக்கள், தாய், தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஜமாஅத் ஜும்ஆ,பெருநாள் தொழுகையில் பங்கெடுத்தல், தனது வயிற்றுக்காக உழைத்தல், அமானிதம் பேணுதல், வாக்குறுதியை நிறைவேற்றல், ஸலாம் கூறுதல், நோயுற்றவர்களை விசாரிக்கச் செல்லுதல், மரணித்தவரை அடக்கம் செய்தல், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல், அறப்போரில் பங்கெடுத்தல் மற்றும் பல்லாயிரம் கடமைகள் முஸ்லிம்கள் மீது உள்ளன.

இந்தத் தனிமை, மேற்கண்ட கடமைகள் அனைத்தை விட்டும் ஒரு முஸ்லிமை அப்புறப்படுத்தி விடுகின்றன. இவ்வளவு கடமைகளை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ள இஸ்லாம் தனிமையை ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.

 ஒரு நபித்தோழர், சுவை மிகுந்த நீரூற்று அமைந்த ஒரு கணவாயைக் கடந்து சென்றார். அது அவரை மிகவும் கவர்ந்தது. நான் மக்களை விட்டு விலகி இந்தக் கணவாயிலேயே தங்கி விடலாமே என்று தனக்குள் அவர் கூறிக்கொண்டார். இது பற்றி அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது அவ்வாறு செய்யாதே! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுவது 70 ஆண்டுகள் அவர் தொழுததை விட மேலானது. அல்லாஹ் உங்களை மன்னித்து உங்களை சுவர்க்கத்தில் சேர்ப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! ஒரு ஒட்டகத்தின் பால் கறக்கும் நேரம் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தால் சுவர்க்கம் அவருக்கு கடமையாகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : திர்மிதீ

 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சிறு படையாக புறப்பட்டோம். எங்களில் ஒருவர் தண்ணீரும் தாவரங்களும் நிறைந்த குகைக்கருகே சென்றார். அந்த இடத்தில் தங்கிக் கொண்டு உலகை விட்டும் தனிமைப்பட அவர் மனம்விரும்பியது. இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் அவர் அனுமதி கேட்டார். அப்ப்போது நபி (ஸல்) அவர்கள் “நான் யூத மார்க்கத்தையும் கிறித்தவ மார்க்கத்தையும் கொண்டு அனுப்பப்படவில்லை. தெளிவான நேரான மார்க்கத்தைக்கொண்டு அனுப்பப்பட்டுள்ளேன். யாருடைய கையில் இந்த முஹம்மதுவின் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிதுநேரம் அல்லது மாலையில் சிறிதுநேரம் செலவிடுவது இவ்வுலகை விடவும், அதில் உள்ளவற்றை விடவும் மிகவும் மேலானதாகும். (போர்) அணியில் ஒருவர் சற்று நேரம் நிற்பது அவர் அறுபது ஆண்டுகள் தொழுததை விட சிறந்ததாகும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி),  நூல் : அஹ்மத்

 கல்வத் என்ற தனிமைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது யூத, கிறித்தவ மார்க்கத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தாந்தமாகும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இந்த இறக்குமதி சரக்குக்குத் தான் இஸ்லாமிய முத்திரை குத்த முயல்கிறார் ஸகரிய்யா சாஹிப்.

அர்ஷுடைய நிழல் தனிமையில் இருப்பதில் கிடைத்தது என்ற வாசகம் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் மாற்று மதச்சித்தாந்தம் என்பதை இனியேனும் தப்லீக் ஜமாஅத்தினர் உணர்வார்களா?

“தனது நிழலைத் தவிர வேறு நிழலேதும் இல்லாத அந்நாளில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருவான் என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவர்களை வரிசைப்படுத்தினார்கள்.

1.       நீதியாக நடந்த தலைவன்:

சமுதாயத்தில் கலந்து அவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களிடையே நீதியுடன் நடந்து கொண்ட தலைவனுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் என்று நபி (ஸல்) உத்தரவாதம் தருகிறார்கள். ஸகரிய்யா சாஹிபோ தனிமையில் நிழலைத் தேடுகிறார்.

2.       அல்லாஹ்வின் வணக்கத்தில் ஊறித் திளைத்த இளைஞன்:

இளம் வயதிலேயே வணக்க வழிபாடுகளில் பேணுதலாக நடந்து கொண்ட இளைஞனுக்கும் அர்ஷின் நிழல் உண்டு என நபி (ஸல்) உறுதியளிக்கிறார்கள்.

வணக்கத்தில் ஊறித் திளைப்பது என்றால் அல்லாஹ்வின் அனைத்து ஏவல் விலக்கல்களையும் பேணி நடப்பதுதான்.

3,4   அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசித்து அல்லாஹ்வுக்காகவே பகைத்துக் கொண்ட இருவர்:

சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.

5.  அழகும், குணமும் உடைய பெண்மணி அழைக்கும் போது “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று கூறி (தன்னைக்) காத்துக்கொண்ட மனிதன்:

சமூகத்தில் கலந்து வாழும் போதே இந்த நிலையை ஒருவன் அடைய முடியும்.

6.     வலது கையால் கொடுப்பதை இடது கை அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவன்:

தர்மம் செய்வதென்றால் காடோ, செடியோ என்று மக்களை விட்டு விலகிவிட்டால் அது சாத்தியமாகாது.

7.       தனித்திருக்கும்போது அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவன்:

இது கூட காடோ, செடியோ என்று போவதைக் குறிப்பிடவில்லை. சமூகத்தில் கலந்து வாழும் போது சிறிதளவு தனிமையைப் பெறும் போது அப்போதும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சுவதையே குறிப்பிடுகிறது.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணக் கிடைக்கின்றது.

அர்ஷுடைய நிழலைத் தேடும் வழிகளை அல்லாஹ்வின் தூதர் மிகத் தெளிவாக அறிவித்த பிறகு ஷகீக் பல்கி என்பவர் யூத மார்க்கத்திலும் கிறித்தவ மார்க்கத்திலும் அந்த நிழலைத் தேடினார் என்பதை அறிவுடையவர்கள் நம்ப முடியுமா?

இது போன்ற போதனைகள் நாளடைவில் மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்ததால் நாளைக்கு தப்லீக் இயக்கமும் அழிந்து விடும். தொழுகைக்கு அழைப்பதை விட்டு விட்டு தனிமையை நோக்கி அவர்கள் ஓடி விடக் கூடும். இதை உணர்ந்தாவது இந்த தஃலீம் தொகுப்பைத் தூக்கி எறிவார்களா?

சொர்க்கத்தில் தொழுகையா?

ஹஜ்ரத் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. அவர்களுடைய கலீபாக்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாஹீர் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கவலையுடன் கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் ஹஜ்ரத் சொர்க்கத்தில் தொழுகை எவ்வாறு இருக்க முடியும்? அது அமல்களுக்குப் பிரதி பலன்கள் வழங்கப்படும் இடமாயிற்றே! அமல் செய்யும் இடமல்லவே என்று கூறியவுடன், ஆஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்று கூறினார்கள்.

இப்படிப்பட்ட நல்லடியார்களினால்தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. உண்மையில் வாழ்க்கையின் இன்பத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்கள் இப்படிப்பட்ட பெரியார்கள் தான்.

இது தப்லீக் தஃலீம் தொகுப்பு நூலில் பக்கம் 45 ல் இடம் பெற்றுள்ளது.

என்னே பக்தி! என்னே தக்வா? என்று அப்பாவிகள் மூக்கில் விரலை வைத்து வியப்படையுமளவுக்கு இந்தக் கதை பெரியார்கள் (?) மீது போலிமதிப்பை ஏற்படுத்துவதுடன் இஸ்லாத்தை தவறான வடிவத்திலும் அறிமுகப்படுத்துகின்றது.

தொழுகையாகட்டும்! இன்ன பிற வணக்க வழிபாடுகளாகட்டும்! ஒவ்வொரு முஸ்லிமும் அதை விரும்பியாக வேண்டும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆயினும் அதற்கு ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை விரும்ப வேண்டுமே தவிர இறைவன் விரும்பாவிட்டாலும் அவற்றை விரும்புவேன் என்று அடமபிடிக்க முடியாது.

எப்போது அவற்றை நிறைவேற்ற வேண்டும் என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அப்போது அதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளானோ அப்படிச் செய்ய வேண்டும்.

தொழுகை நல்லது தானே என்று எண்ணிக் கொண்டு நான்கு ரக்அத்களுக்கு பதிலாக ஆறு ரக்அத்கள் ஒருவன் தொழுதால் அவன் பக்தனல்ல. அகம்பாவம் கொண்டவனாகவோ அல்லது மார்க்கத்தை அறியாத மூடனாகவோ அவன் இருக்க வேண்டும்.

பக்தி எனும் பெயரில் ஒருவன் பகலில் நோன்பு நோற்பதற்குப் பதிலாக இரவிலும் நோன்பு நோற்க முயன்றால், தொழக் கூடாத நேரங்களில் ஒருவன் தொழுதால் அவன் தக்வாதாரியாக விட முடியாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இதன் போலித்தனம் பளிச்சிடும்.

சொர்க்கத்தில் தொழுகை கிடையாதா? என்று அஷ்ரப் அலி தானவியின் கலீபா அப்துல் வாஹித் என்பார் மேற்கொண்ட கதையில் கேட்கிறார். சொர்க்கத்தில் தொழுகை உட்பட எந்தவிதமான வணக்கமுறைகளும் கிடையாது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எல்லா முஸ்லிம்களும் அறிந்துள்ள இந்த சாதாரண விஷயம் கூட இந்தப் பெரியாருக்குத் தெரியவில்லை.

அதுதான் போகட்டும்! எத்தனையோ பேரறிஞர்களுக்கு சில நேரங்களில் சாதாரண விஷயம் தெரியாமலிருப்பது இயற்கையே என்பதால் விட்டுவிடுவோம். ஒரு விபரமறிந்த மனிதர் இந்த பெரியாருக்கு சொர்க்கத்தில் தொழுகை கிடையாது என்பதை விளக்கிய பிறகும் கூட அவர் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள முன் வரவில்லை. தனது அறியாமையில் மேலும் பிடிவாதம் காட்டுகிறார். அவர் எதிரொலி தான் சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்ற அவரது கேள்வி.

இந்தக் கேள்வியில் அவரது முரட்டு அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. இறைவனது ஏற்பாட்டில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து வெளிப்படுகின்றது.

தொழுகை மற்றும் வணக்கங்கள் எதுவுமின்றி சொர்க்கத்தில் வாழ முடியும் என இறைவன் ஏற்பாடு செய்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியமாகும்? என்று இவர் ஐயம் தெரிவிக்கிறார் இறைவனது ஏற்பாட்டில் குறை காண்கிறார்.

ஸகரிய்யா சாஹிப் பார்வையில் வேண்டுமானால் அந்தப் பெரியாரின் மகாத்மியம் தென்படலாம். நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இறைவனின் மகாத்மியத்திற்கு இவர் மாசு கற்பிக்கிறார் என்றே முடிவுக்கு வருவார்கள்.

எந்த இறைவனது மேன்மையை அடியான் ஒப்புக்கொள்வதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, இறைவன் எஜமான் என்பதையும், தான் அவனது அடிமை என்பதையும் பறைசாற்றுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, அந்தத் தொழுகையை வைத்தே இறைவனை ஸகரிய்யா சாஹிபும் இந்தப் பெரியாரும் தூர எறிகிறார்கள்.

மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவராகவும், இறைவனது ஏற்பாட்டில் குறை கண்டவராகவும் அறிமுகம் செய்யப்பட வேண்டிய இப்பெரியார் இங்கே மகானாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இதுபோன்ற கதைகளை தொழுகையைச் சிறப்பிப்பதற்காக கூறுவது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல. பெரியார்களைப் பற்றிய மதிப்பு மக்களிடம் இடம் பெற வேண்டும் என்பதுவே இவரது நோக்கம். இது ஆதாரமற்ற கற்பனை அல்ல. இந்த நோக்கத்தை ஸகரிய்யா சாஹிப் அவர்களே அவரையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்.

இந்தக் கதையை எழுதிவிட்டு, பார்த்தீர்களா தொழுகையின் சிறப்பை? என்று ஸகரிய்யா சாஹிப் விமர்சனம் செய்திருந்தால் கதை சரியாக இல்லாவிட்டாலும் ஸகரிய்யா சாஹிபின் நோக்கத்தையாவது சந்தேகிக்காமலிருக்கலாம். இவரோ கதையை எழுதிவிட்டு இப்படிப்பட்ட நல்லடியார்களினால் தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது என்று கூறுகிறார். அதாவது அந்தப் பெரியாரின் மதிப்பைக் கூட்டிக்காட்டுவது தான் அவரது நோக்கம் என்பதற்கு இந்த விமர்சனமே சான்று.

பெரியார்களை இப்படி உயர்த்தி அவர்களைப் பற்றி புனிதர்கள் என்ற நம்பிக்கையை வேரூன்றச் செய்தால் தன்னையும் மற்றவர்கள் புனிதாரக மதிப்பார்கள் என்ற திட்டமே இந்தக் கதைகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம். ஸகரிய்யா சாஹிப் அறிமுகப்படுத்தும் வாஹிதும் இந்த ஸகரிய்யா சாஹிபும் முஜத்திதே அல்பதானி அவர்களின் சீடர்கள், தனது சகாவின் மகிமையை உயர்த்தினால் தனக்குப் பிற்காலத்தில் அதுபோன்ற உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே கதையின் பின்னணி.

தங்களைப் பற்றி இமேஜை உயர்த்திக் கொண்டு முரீது வியாபாரத்தை தடங்கலின்றி நடத்திட இது போன்ற கதைகள் இவருக்குத் தேவைப்படுகிறது.

ஆகவே பொய்யையும், புரட்டையும் மக்கள் மத்தியில் பரப்பும்  தப்லீகின் தஃலீம் தொகுப்பை நாம் படிப்பதோ மற்றவர்களுக்கு படிக்க ஆர்வமூட்டுவதோ மாபெரும் பாவமாகும் என்பதை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

தஃலீம் தொடர்பான அபத்தங்கள் சகோதரர் பி.ஜெ அவர்களின் தப்லீக் தஃலீம் ஓர் ஆய்வு என்ற நூலை மையப்படுத்தி தொகுக்கப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு குறிப்பிட்ட நூலைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.