வட்டி (மறுமையின் நிலை)

Name (பெயர்)                   : ABDUL MALICK SP

Country (நாடு)                   : FRANCE, Garges Les Gonesse

Title (தலைப்பு)                : வட்டி (மறுமையின் நிலை)

“அல்லாஹ்வுக்கும் இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.(அல் குர்ஆன் 24:54 )

 

ஒரு முஸ்லிம் உலகில் என்ன செய்தாலும், தான் செய்யக்கூடிய அச்செயலைத் திருக்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்கள் வாழ்வினிலும் ஒப்பிட்டுப்பார்த்த பின்பே செயல்படுத்த வேண்டும். வட்டி முறைப் பொருளாதாரத்தை நாம் அவ்வாறு காணும்போது அது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே தெரிய வருகிறது.
 

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. அல்குர்ஆன் (30:39)

பொருள் கொடுத்தவன் தன் பொருளைத் திரும்பப் பெறும் வரையிலோ அல்லது திரும்பப் பெறும் போதோ அல்லது தவணை முறையிலோ தான் கொடுத்துள்ளவற்றுக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டி எனப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கிவிடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

 

நூல் : புஹாரி 2177

 

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேலும் வட்டி பற்றியும், வட்டி வாங்குபவர்களைப் பற்றியும் இறைவன் தனது திருமறையில் குறிப்பிடும் போதுவட்டி வாங்கி உண்பவன் பைத்தியக்காரன், வட்டி வாங்குபவன் பெரும் குற்றவாளி, அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன், அதை விட்டும் மீளாவிட்டால் நிரந்தர நரகவாசியாக அவன் ஆகிவிடுவான் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளான்.
 

யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:274,275)

 

 

மேற்கண்ட வசனத்தில் வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதோடு, இக்கடுமையான எச்சரிக்கைக்குப் பின்பும் வட்டி வாங்க முற்படுவர் நரகவாசி என்றும் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

இக்கொடிய பாவத்தைப் பாவம் என்ற அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். அப்படி அவன் மீளவில்லையென்றால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன் என்று அதே அத்தியாயத்தில் அடுத்து வரும் வசனங்கள் தெரிவிக்கின்றன.

 

 

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிட்டால் இறைவனும், அவனுடைய தூதருடனும் யுத்தம் செய்யத் தயாராகுங்கள். ஆயினும், நீங்கள்(வட்டி வாங்கியதைப் பற்றி மனம் வருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களு க்கு உண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் (அவ்வாறே) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்(2:278,279)

 

 

ஆனால் பிரான்ஸ் நாட்டில் சில முஸ்லீம் நண்பர்கள் வீடு வாங்குவது வட்டி முறைப் பொருளாதாரத்தில் தான். அதிலும் சில முஸ்லீம்கள் சொந்தமாக ஒருவீடு கட்டிக்க(வாங்கிக்க) மட்டும் வட்டி முறையிலும் மார்க்கத்தில் அனுமதி உண்டு என்கிறார்கள்.

 

 

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.(2:146)

 

 

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். அல்குர்ஆன் 4:65

 

 

குற்றத்தில் சமமானவர்கள்:

 

 

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள். அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3258

 

 

வட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே வட்டி வாங்குபவன், வட்டி கொடுப்பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும் குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும் குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும் நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.

 

 

இறையச்சமின்மை:

 

 

பொதுவாக இறையச்சம் நம்மை விட்டு அகன்று விட்டால் எல்லாத்தீய செயல்களும் எளிதில் நம் இதயத்தில் இடம் பிடித்து விடும். இறையச்சம் என்பது ஏனோதானோ என்றில்லாமல் முறையாக இருக்க வேண்டும்.

 

 

நம்பிக்கை கொண்டாரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் (அல்லாஹ் விற்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம். அல்குர்ஆன் 3:102

 

 

உங்களால் இயன்றவரை (எந்த அளவிற்கு அதிகமாக அஞ்சமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக) இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 65:16

 

 

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். அல்குர்ஆன் 2:159

 

 

இந்த வட்டி முறை பொருளாதாரம் முஸ்லிம்கள் மத்தியில் தலை விரித்தாடுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் சீர் செய்வோமானால் நாம் நமது சமுதாயத்தை விட்டும் வட்டியை முற்றிலுமாகத் துரத்தி விடலாம்.

 

 

தொழுகையை நிலை நிறுத்துங்கள் இணை வைப்பவர்களில் உள்ளவர்களாக நீங்கள் ஆகிவிட வேண்டாம்.” (30-31)

என்றுக் அல்லாஹ்; கூரியதில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இறைமறுப்பாளர்கள், இணைவைப்பவர்கள் ஆகியவர்களைப் பற்றி நரகவாசிகள் என்ற கூறும் போது ஹூம்ஃபீஹா காலிதூன்” (அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்) என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தியிருக்கிறான். அதே வாசகத்தைத் தான் இங்கு வட்டி பற்றி எச்சரிக்கும் போதும் கூறியிருக்கிறான். அப்படியானால் வட்டி என்பது எந்த அளவிற்குக் கொடிய பாவம் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.

 

 

இக்கொடிய பாவத்தைப் பாவம் என்ற அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். வட்டி எனும் இக்கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக!

 

அடமானம், ஒத்தி, தவணை முறையில் பொருட்கள் வாங்குதல், ஏலச்சீட்டு, இவை அனைத்தும் வட்டியின் மறுப்பெயர்கள் குறிப்பாக வீடு வாங்குவதற்காக நாம் வட்டி முறைப் பொருளாதாரத்தில் கடன் வங்கக்கூடாது அல்லாஹ் அறிந்தவன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.